Paristamil Navigation Paristamil advert login

18,600 அடி உயரத்தில் மீட்புப்பணி: இந்திய ராணுவம் அசத்தல்

18,600 அடி உயரத்தில் மீட்புப்பணி: இந்திய ராணுவம் அசத்தல்

31 ஆவணி 2026 திங்கள் 06:31 | பார்வைகள் : 114


நுன் குன் மலைத் தொடரில் 18,600 அடி உயரத்தில் சிக்கிய நபரை, தரையிறங்க முடியாத சூழல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஹெலிகாப்டர் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் மீட்டு சாதனை படைத்துள்ளனர்.

லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இமயமலைத் தொடரில் நுன் குன் மலைத் தொடர் அமைந்துள்ளது. இதில் 23,409 அடி உயரம் கொண்ட நுன் சிகரம் ஜம்மு காஷ்மீர் பகுதியிலும், 23,218 அடி உயரம் கொண்ட குன் சிகரம் லடாக் பகுதியிலும் அமைந்துள்ளன. இந்த மலைத் தொடரில் 18,600 அடி உயரத்தில் சிக்கித் தவித்த ஒருவரை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் சிக்கியிருந்த பகுதியில் போதுமான வளிமண்டல அடர்த்தி இல்லை. இதன் காரணமாக ஹெலிகாப்டர் இன்ஜின் செயல்பாடு மற்றும் ரோட்டர் லிப்ட் ஆகியவற்றில் சிக்கல் ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து, ஹெலிகாப்டர் எளிதில் பறப்பதற்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டும் என்பதற்காக, அதில் இருந்த அத்தியாவசியமற்ற பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

மேலும், மீட்புப்பணியை சுமூகமாக மேற்கொண்டு, தேவையான தூரத்தை சென்று திரும்புவதை உறுதி செய்வதுடன், ஹெலிகாப்டரின் பறக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மிகக் குறைந்த அளவிலான எரிபொருள் மட்டுமே அதில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் இருந்த இடத்தை ராணுவ வீரர்கள் சென்றடைந்தபோதும், அவர்களுக்கு மேலும் சில சவால்கள் காத்திருந்தன. மலைப்பகுதியில் வீசிய பலத்த காற்றுடன், சமதளமாக இல்லாத தரையிறங்கும் பகுதியையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவிய நிலையில், ஹெலிகாப்டரை தாழ்வான பகுதியில் அபாயகரமான முறையில் நிலைநிறுத்தி, தொழில்நுட்ப ரீதியாக சில நுணுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

செங்குத்தான சரிவு கொண்ட அந்தப் பகுதியில் ஹெலிகாப்டரை சமநிலைப்படுத்தி நிலையாக வைத்த பின்னர், ராணுவ வீரர்கள் கீழே இறங்கி பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தரையில் இருந்து 18,600 அடி உயரத்தில் அமைந்துள்ள நுன் குன் மலைத் தொடரில், இந்திய ராணுவ விமானிகள் மிகுந்த துணிச்சலுடன் மீட்புப்பணியை மேற்கொண்டனர். தரையிறங்க முடியாத பகுதி மற்றும் பலத்த காற்று போன்ற கடுமையான சவால்களுக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தரையிறங்குவதற்குக் கிடைத்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப்பணி, ராணுவத்தின் துணிச்சல் மற்றும் இரக்க குணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்திய ராணுவத்தின் இந்த மீட்புப்பணி, அதன் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பத் திறனுடன், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறது. உலகின் மிகவும் சவாலான மலைப்பகுதிகளிலும் மனித உயிர்களை காப்பாற்றுவதில் ராணுவம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்