Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம் - 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய பாடசாலை அதிபர்

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம் - 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய பாடசாலை அதிபர்

31 ஆவணி 2026 திங்கள் 05:46 | பார்வைகள் : 152


நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கின் போது, துரிதமாகச் செயல்பட்ட நேபாள பாடசாலை அதிபர் ராஜேந்திர தவதி 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பாடசாலையின் 47 வயது அதிபரான ராஜேந்திர தவதிக்கு, ஆகஸ்ட் 26 அன்று காலை 9:20 மணியளவில் வெள்ளம் வேகமாக வருவதாக எச்சரிக்கை அழைப்பு வந்தது. அப்போது சுமார் 900 மாணவர்கள் ஏற்கனவே பாடசாலையில் இருந்தனர், மேலும் 700 மாணவர்கள் நடந்து மற்றும் பேருந்துகளில் பாடசாலைக்கு வந்துகொண்டிருந்தனர்.

சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ள பெட்ராவாடியில் இருந்து அவரது நண்பர் ஒருவர்காலில் தொலைபேசியில் அழைத்து, அந்த கிராமத்தையே ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதாகவும், உடனே தப்பியோடும் படியும் எச்சரித்தார். ஆற்றில் இருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்த தங்களது மூன்று மாடி கான்கிரீட் பாடசாலை பாதுகாப்பானது என்று அவர் முதலில் நினைத்தார். ஆனால், ஒரு பெற்றோர் வந்து தண்ணீர் வேகமாக எழுந்து வருவதாக எச்சரித்ததும், அவர் உடனடியாகப் பள்ளிக் மணியை அடித்து, வகுப்பறைகளை உடனே காலி செய்யுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போதுதான், தலா 80 மாணவர்களுடன் பல பேருந்துகள் இன்னும் வழியில் வந்து கொண்டிருப்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. ஒரு பேருந்து தவிர மற்ற அனைத்து ஓட்டுநர்களையும் தொடர்புகொண்டு உடனடியாகத் திருப்புமாறு உத்தரவிட்டார். எஞ்சியிருந்த பேருந்து அருகில் உள்ள பாலத்தைக் கடக்கும்போது அதைக் கண்ட அவர், தண்ணீர் பாடசாலை வளாகத்திற்குள் நுழையத் தொடங்கிய நிலையில் ஓட்டுநரிடம் வண்டியைத் திருப்புமாறு கூறினார். அந்தப் பேருந்து மறுபுறம் சென்றடைந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பாலம் இடிந்து விழுந்தது.

பாடசாலையில் இருந்த குழந்தைகள் அனைவரும் கால்நடையாக மேடான பகுதிக்கு அனுப்பப்பட்டனர். வெள்ளம் பாடசாலை கட்டடங்களை அடித்துச் சென்றபோது அவர்கள் ஒரு போதி மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்தனர். ஒரு மாணவிக்கு பதற்ற நோய் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளில் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இறுதியில் அனைத்து 1,643 மாணவர்களும் உயிர் பிழைத்தனர். இருப்பினும், சமூக வரலாற்று ஆசிரியர் சந்தோஸ் பரியார் மற்றும் பள்ளி துப்புரவுப் பணியாளர் சுல்தான் லாமா ஆகியோர் அப்பகுதிக்குத் திரும்பிச் சென்றபோது உயிரிழந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்