Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 %: மத்திய அரசு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 %: மத்திய அரசு

1 புரட்டாசி 2026 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 111


2026 - 27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்ததாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

**அறிக்கையில் கூறியிருப்பதாவது:**

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2022 - 23ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட நிலையான விலைகளில் கணக்கிடப்பட்ட ரியல் ஜி.டி.பி., 81.35 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 75.46 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

உலகளாவிய சவால்கள் நிலவி வரும் நிலையிலும், இந்திய பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் முதல் காலாண்டில் 7 சதவீதம், இரண்டாம் காலாண்டில் 6.4 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 6.5 சதவீதம் மற்றும் நான்காம் காலாண்டில் 6.8 சதவீதம் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

**மாபெரும் சாதனை**

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2026 - 27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது மாபெரும் சாதனையாகும். உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவிய போதிலும், எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு மத்தியில், நமது மக்களின் கூட்டு பலத்தால் இந்தியா இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது.

பேரழிவுகளை கணித்தவர்கள் அழிந்தனர். இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

**மத்திய நிதியமைச்சர் நம்பிக்கை**

அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகாகோவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசியதாவது:

வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன், சொந்த நாட்டின் தேவைகளிலும் கவனம் செலுத்துவதால், உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும் இந்தியா மீள்திறனுடன் இருந்து வருகிறது. இதனால், இந்திய விவசாயிகள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்படவில்லை. சவாலான சூழ்நிலையிலும் நமது குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்.

உக்ரைன் - ரஷ்யா போர், அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள், உர விநியோகத்தில் ஏற்பட்ட தடை ஆகியவற்றால் உருவான புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் விநியோகச் சங்கிலி தடைகள் இருந்தபோதிலும், இந்தியா தனது வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட இடையூறுகளால் கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரங்களின் விநியோகம் பாதிக்கப்பட்ட போதிலும், மாற்று வழிகள் மூலம் விநியோகம் உறுதி செய்யப்பட்டது.

கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியா 7 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த ஆண்டும் நாட்டின் வளர்ச்சி அதே அளவில் இருக்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்