Paristamil Navigation Paristamil advert login

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

2 புரட்டாசி 2026 புதன் 08:35 | பார்வைகள் : 114


அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்கள்

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள், பின்னர் ஆளும் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

எனினும், 6 எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக புகார் மனுக்களையும் சபாநாயகரிடம் அதிமுக வழங்கியுள்ளது.

சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக வழக்கு

6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

இசக்கி சுப்பையா மனு

அதிமுக எம்எல்ஏவாக வெற்றி பெற்று, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா, அதன்பிறகு தவெகவில் இணைந்தார்.

தேர்தல் வழக்கு முடியும் வரை மீண்டும் எம்எல்ஏவாக செயல்பட தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்