உறவு கசக்க காரணம் என்ன?
3 மார்கழி 2016 சனி 16:07 | பார்வைகள் : 14300
‘‘அவர் என்னிடம் அன்பாக இல்லை’’ – இது மனைவியின் புலம்பல். ‘‘நான் என்ன சொன்னாலும் அவள் புரிஞ்சுக்கமாட்டேங்குறா?’’ – இது கணவரின் ஆதங்கம். இப்படி எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். இந்த முட்டல் மோதல் ஏன்? சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன? இதற்கு தீர்வே கிடையாதா?...
எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. இல்லறத்தில் இல்லாத இனிமைகளா? பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கை. எப்போது கணவன், மனைவியின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும், எப்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது புரியாமல்தான் அத்தனை பிரச்சினைகளும்.
இதற்கு ஒரே தீர்வு மனம் விட்டுப் பேசிக்கொள்வதுதான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும். வாருங்கள் தம்பதியரின் புரிந்துணர்வை அதிகரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்...
அலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல்–மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.
ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் தீர்வு விரைவில் எட்டப்படும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.
கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான்’ என்று மனைவி, வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினைகளை பெரிதாக்கும்.
இருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. ‘அவர்/அவள் இறங்கி வரட்டும்’, ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்?’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.
துணைவரிடம் மரியாதை காட்டுங்கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரம் குறைவாக பேசக்கூடாது. இது என் வேலை இல்லை என்று பிரித்துக் கொள்ளாமல், உங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கும் துணைவருக்கு அவ்வப்போது பாராட்டுகளும், நன்றியும் கூறுங்கள்.
தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது. மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங்கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
இதுதான் பின்னர் தம்பதிக்குள் சண்டை ஏற்படும்போது, ‘அவர் அப்படி, இவர் இப்படி’ என்று குடும்பத்தினரை வசைபாட காரணமாகிறது. அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை வஞ்சகத்தை வளர்த்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண்–பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை தவிருங்கள்.
மனைவி கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்தியம்தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். பேசித்தான் பாருங்களேன்!
உங்கள் தேவையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை சுட்டிக்காட்டி ஒப்பிட்டு பார்த்து உங்கள் வாழ்க்கையை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு அமைந்த வாழ்க்கையைப் பற்றி பேசி ‘நம் வாழ்வு அப்படி இல்லையே’ என்று ஏங்குவது குடும்பத்திற்குள் பிரச்சினையை வளர்க்கும். வாழ்க்கை கனவுகளை நிறைவேற்ற தம்பதியர் இருவரும் இணைந்து போராடுங்கள்.
ஆக புரிதல் இல்லாமல் புலம்புவதைவிட்டு, வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள். அன்பை காட்டுங்கள், ஆறுதல் பெறுங்கள். இல்லறம் இனிக்கட்டும்!
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire